காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்!
அன்பின் விழாக்கோலம்!
காதலைக் கற்றுத்தரும்
நித்ய பாடம்...
காலைப் பெண்ணின்
கட்டுக்கடங்காத மோகம்!
சோலைகள் என்பன..
பூமியில் ஆங்கே
திட்டுத்திட்டாய்
தெறித்திருக்கும்
சொர்க்க லோகம்!
இயற்கையின்
தேசத்தினை
ஆண்டு வருபவள்
இந்த இளவரசி!
இவை செடிகள்
பெற்ற
ஞானம்
அன்பினை அனுதினமும்
வளர்க்கும்
இந்த யாகம்!
உயர்ந்த மரங்களில்
பூத்திருக்கும்
பூக்கள்
இன்னொரு வானவில்லாய்
தோன்றும்
ஒற்றைப் பூக்கள்
குறுநகை என்றால்..
கொத்தாய் மலர்ந்த
மலர்கள்
வளர்ந்து கொண்டே
போகும்
புன்னகை!
பெண்களும் தாம்
வேண்டிப் பெற
வேண்டிய
அழகினைப் பெற்றதால்தான்
பூக்களை
கூந்தலில் அணிந்து
மகிழ்கின்றனர்
இவை கடைத்தெருவுக்கு
வந்தாலும்..
கலைச்செறுக்குள்ள
கவிஞனைப் போல
தன்னை வித்தியாசப்
படுத்திக்கொள்ளும்
வாசனை என்ற
கண்ணுக்கு தெரியாத
விளம்பரப் பலகையினை
இவை கடைத்தெருவெங்கும்
வைத்து விடும்
ஆக்கம்: கவிராஜன்




கருத்துகள்