அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்!
வண்ண நீரினை
சுமந்து செல்லும்
வானூரின் வைகை
இதயத்தின் ஓளிந்திருக்கும்
காதலை…
வரைந்து பார்த்தால்
கிடைத்திடும்
இப்படியொரு
இனிமை… இளமை…
இது அறிஞனின்
வார்த்தைகள் போல்
ஆயிரம் முகம்
காட்டும்!
கவிஞனின் வார்த்தைகள்
போல்
ஒளிந்து மறைந்து
பின் தோன்றி
சுகம் காட்டும்!
இது இறைவன்
எனும் புலவன்
எழுதிய ஏழு
வரி திருக்குறள்!
பூக்களின் அழகினை
புடம் போட்டுச் செய்த
ஆகாய அருள்!
இது பறந்து
செல்லும் ஓரு தேவ பறவையின் ஆனந்தச் சிறகு
அதனால்தான்…
சில கணங்களிலேயே
காணாமல் போய் விடுகிறது!
இது மறந்து
போய் விடாத பால்ய நினைவுகள்
அதனால்தான்
…
எப்போதும் வண்ணங்களாகவே
காட்சியளிக்கிறது!
இது அன்பினை
அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்!
இது புன்னகை
மாறாத தேவ உதடுகளின் ஆனந்தச் சொல்!
காலகாலமாய்
காட்சிக்கு வரும் களிப்பான நாடகம்
எழுதி மேடையேற்றியவன்
யார் என்பது பூடகம்!
இது பூக்கள்
வண்ணங்களைக் கற்றுக் கொண்ட ஆசிரியன்
வானில் வந்து
நின்ற பொழுதில் பூமியெங்கும் அன்பின் பூச்சொரியும்
ஆனந்தன்
ஆக்கம்: கவிராஜன்

கருத்துகள்
அருமை. அருமை
கற்பனைக்கேது இலக்கணம்? ஏழு வரியிலும் திருக்குறள் அமையும்.
அது கண்ணிலும் படும் என்ற கற்பனை நன்று.
நற்கவிதை. பாராட்டுக்கள்!
சிநேகமாய்
புதுயுகன்
அது நல்லோர் கொண்ட நட்பேயாகும்!
நன்றி இனிமையான இலக்கியத் தோழனே!