கொலைகாரக் கொரோனா... நீ நாடு விட்டு நாடு தாவும் மாயாவி!
கொலைகாரக் கொரோனா! நீ… நாடு விட்டு நாடு தாவும் மாயாவி! மனித உயிர்களை மலிவாக்கி விட்ட மரண வியாபாரி அண்டை வீட்டுக்காரனையும் அயலானாய் ஆக்கி விட்ட அருபம்! எமனை விட கொடியது கண்ணுக்குத் தெரியாத உன் சொரூபம்! மனித சமூகம்… உன்னை சீக்கிரம் கை கழுவ வேண்டும்.! ‘ `அச்’ என்று யாராவது தும்மினாலும் நோய் பரவி விடுமோ என்ற அச்சம்! `பக்” என்று இருமினாலும் கொரோனா தொற்றி விடுமோ.. என பதை பதைக்கிறது நெஞ்சம்! இத்தாலியில் நீ மரணத்தின் கூட்டாளி… இங்கிலாந்து இளவரசரையும் விட்டு வைக்காத கொடிய கோமாளி! அமெரிக்காவிலும் அடி எடுத்து வைத்து விட்ட சீனாவின் இறக்குமதியே.. இந்தியாவுக்குள்ளும் வந்து விட்ட சிறுமதியே மனிதம் போக வேண்டியது வெகு தூரம்! சின்னஞ் சிறு வைரஸே... உன்னால் தடைப்படாது அது ஒரு போதும்! புற்றீசல் போல் கிளம்பி விட்டாய்.. உன் வாழ்வு சில தினங்களில் முடியப் போகிறது என்பதனை... ஏனோ நீ மறந்து விட்டாய்! ஆக்கம்: கவிராஜன்